சீன அதிபரைச் சந்தித்து பேசிய பிரதமர் மோடி.. எல்லை பிரச்சனைக்கு தீர்வு?
Source: News18 தமிழ் | Original Published At: 2024-10-23 15:43:04 UTC
Key Points
- பிரிக்ஸ் உச்சிமாநாடு ரஷ்யாவில் நடைபெற்றது
- மோடி-ஜின்பிங் சந்திப்பில் எல்லைப் பிரச்சனை விவாதம்
- ரஷ்யா-உக்ரைன் பிரச்னைக்கு அமைதியான தீர்வு கோரிக்கை
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சிமாநாடு ரஷ்யா தலைமையில் நடைபெற்றது.
ரஷ்யாவில் உள்ள காசான் நகரில் நடைபெற்ற இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, ரஷ்யாவுக்கு புறப்பட்டுச் சென்றார். அதன்படி ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு விமானநிலையத்தில் ரஷ்ய அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் ஹோட்டலுக்கு வந்த பிரதமருக்கு நேற்று, இந்திய தேசிய கொடிகளை ஏந்தியும், சமஸ்கிருத பாடல்களை பாடியும் அங்குள்ள இந்தியர்கள் வரவேற்பு அளித்தனர். பாரம்பரிய இந்திய ஆடைகள் அணிந்த ரஷ்ய கலைஞர்கள், தங்கள் நடன நிகழ்ச்சி மூலம் வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தனிப்பட்ட ஆலோசனையில் ஈடுபட்டார். பிராந்தியத்தில் அமைதி திரும்பவும் நிலைத்தன்மை ஏற்படவும் இந்தியா முழு ஆதரவு அளிப்பதாக ரஷ்ய அதிபரிடம் பிரதமர் தெரிவித்தார். ரஷ்யா-உக்ரைன் பிரச்னை அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.